Thursday, 30 March 2017

அரசாங்கத்தின் நிர்வாகத் துறவு!

சலித்துப்போகுமே என்றுகூடச் சிந்திக்காமல் ‘செயலிழந்த அரசு’ என்று அரசாங்கத்தை ஓயாமல் விமர்சிப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கம். அரசாங்கத்தின் நிர்வாகத் துறவு என்ற விமர்சனம் அந்த வகையைச் சேர்ந்ததல்ல. நிர்வாகத் துறவு என்பது, சில அரசுகளின் கோட்பாடாக, கள உத்தியாகக்கூட இருக்கலாம். சீமைக் கருவேல விவகாரம் நமது அரசாங்கத்தைப் பற்றி இப்படி ஒரு அசலான அரசியல் விமர்சனத்தைச் செய்துள்ளது.

இன்றைக்குப் பிறந்த ஞானத்தின் ஆர்வத்தோடு சமுதாயம் சீமைக் கருவேல மரங்களை இப்போது அகற்றிவருகிறது. இவற்றை அகற்ற அரசுக்கு உத்தரவிடும்படி குடிமக்களைப் போலவே அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் (வைகோ) நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மரங்களால் கெடுதி வரும் என்றோ, வராது என்றோ மற்ற வழக்குகளில் செய்வதுபோல் வாதம் செய்ய யாருக்கும் வழியில்லை. தொடர்புடைய துறைகளுக்கும், உடைமையாளர்களுக்கும் இவற்றை அகற்றும்படி கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒத்துழைக்காத உடைமையாளர்களின் மரங்களை அப்புறப்படுத்தி செலவுத் தொகையை வசூலிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பை மாவட்ட நீதிபதிகளிடமும், அட்வகேட் கமிஷனர்களிடமும் ஒப்படைத்தது. இதற்குத் தனிச் சட்டம் இயற்றி நிதி ஒதுக்கும்படியும் அரசுக்கு உத்தரவு. இப்படியாக இந்த நிகழ்வுத் தொடர் தானாகவே எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து இப்போதைக்கு நின்றிருக்கிறது. அதாவது, அரசிடமும் சட்டமியற்றும் பொறுப்புள்ளவர்களிடமும்.
கவலைக்கும் இடமுண்டு
நம் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சிலர் மகிழ்வது நியாயம்தான். ஆனால், நமது ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதுபற்றி உரத்து ஒலிக்கும் விமர்சனம் ஒன்றும் இதில் உள்ளது. பொதுநல மனுக்களை ஏற்று அரசுக்கு உவப்பில்லாத தீர்வுகளைத் தரும் நீதித் துறை அதீத முனைப்பில் செயல்படுவதாகச் சொல்வதுண்டு. அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே இருக்கும் கோடு ஒன்று இல்லாததுபோலவே நீதித் துறை நடந்துகொள்வதாகவும் சொல்வார்கள். இப்படி நீதித் துறைக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினையாக இதைக் குறைத்துவிடக் கூடாது. ஜனநாயக சமுதாயத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவின் அங்கமாக இதனைப் பார்க்க வேண்டும். அதுதான் இதன் முழுப் பரிமாணம்.
நடுவில் அரசாங்கம் ஒன்று வேண்டுமா? நீதித் துறையும் அதிகாரிகளும் இருந்தாலே போதும் போலிருக்கிறதே என்று தோன்றியிருக்கும். நல்லது நடக்க வேண்டுமென்றால், குடிமக்கள் அரசாங்கத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கும் வழக்காடிகளாக வேண்டுமா என்று கேட்கத் தோன்றும். பொதுப் பிரச்சினைகளில் ஜனநாயக அமைப்பு செயல்படும் முறை தெரிந்ததுதான். பிரச்சினைகளைப் பற்றித் துறைகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சட்டமன்றத்துக்கு, அதன் வழியாக மக்களுக்குப் பதில் சொல்வார்கள். மாறாக, மற்றொரு அதிகார அமைப்பின் முன் சென்று, தனது அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை உருவானது. இதன் அடுத்த பக்கத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும். சீமைக் கருவேலம் செய்யும் தீமைக்கு நீதிமன்றம் சென்றுதான் நிவாரணம் பெற வேண்டும் என்ற நிலைமையில் தன் குடிமக்களை வைத்திருக்கும் அரசாங்கத்தை எப்படி மதிப்பிடலாம்?
இது பழகிப்போன ஒன்றாகக்கூட இருக்கும். இதற்கு முன்பும் பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிடவேண்டி இருந்தது. இதைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு அட்வகேட் கமிஷனர்களையும் நீதிமன்றம் நியமித்தது. கும்பகோணத்திலிருந்த குளங்கள், வாய்க்கால்களின் தற்போதைய நிலைமையினை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நீதிமன்றமே நியமித்துள்ளது.
அசலான அரசியல் விமர்சனம்
மக்கள் கோரிக்கை அனுப்பினால் போதாது. தங்கள் பிரதிநிதிகளை இதற்கெல்லாம் நம்பிப் பயனில்லை. சட்டப் பேரவையில் இவற்றைப் பேச மாட்டார்கள். போராட்டங்கள், பொதுமேடைகள், ஊர்வலங்கள் எல்லாம் ஆண்டுமாறிப்போன ஜனநாயக முறைகள். ஆகப் பெரிய ஜனநாயக அங்கமான அரசியல் கட்சிகளும் இவற்றைக் கவனிக்காது. ஒரு அரசியல் கட்சித் தலைவரே அரசாங்கத்தின் மீது பொது நல வழக்கு தொடரும்போது, இதற்கெல்லாம் வேறு சாட்சியமா நான் தேட வேண்டும்? சீமைக் கருவேல மரப் பிரச்சினை, நமது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது விழுந்த விமர்சனம்.
அந்நிய ஆட்சி எவ்வளவு நல்ல நிர்வாகத்தைத் தந்தாலும், சுதந்திர ஆட்சிக்கு ஈடாகாது என்று விடுதலைப் போரை அப்போது நியாயப்படுத்தினார்கள். அந்நிய ஆட்சியில் செய்யப்பட்ட 1919-ம் ஆண்டுச் சட்டம் ஒன்று உண்டு. அதன் அடிப்படையில் வருவாய் வாரியத்தின் நிலை ஆணை ஒன்றும் உண்டு. பயிருக்கு, மனிதருக்கு, மரங்களுக்குக் கெடுதிசெய்து, வாய்க்கால்களைத் தூர்த்துவிடும் விஷச் செடிகளைப் பற்றிய சட்டம். இன்ன செடி என்று அரசு அறிவித்து, ஆட்சியர் அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவார். அந்தந்த இடங்களின் கைப்பற்றுதாரர் இதை அழித்து மீண்டும் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறுபவர்கள் குற்றம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஆய்வர்களே அந்த இடங்களில் செடிகளை அகற்றி, கைப்பற்றுதாரர்களிடம் செலவுத்தொகையை வசூலிக்கலாம். விஷச் செடிகள் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானால், சட்டம் அரசாங்கத்தையும் ஒரு கைப்பற்றுதாரராகக் கருதும் என்ற சுவாரசியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் மாற்றுக் களம்
சுதந்திரமான ஜனநாயக நாட்டில், இந்த வேலைக்காக நீதிமன்றத்தை இப்போது மக்கள் நாட வேண்டியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? ஜனநாயக முனைப்பில் மக்கள் தங்கள் உரிமைகளை எல்லா வழிகளிலும் வலியுறுத்துகிறார்கள் என்று கொள்ளலாம். வழக்கமான ஜனநாயகக் களங்களில் தங்கள் கோரிக்கைகளைப் பேச முடியாமல் மக்கள் வேறு களங்களைத் தேடுகிறார்கள் என்றும் சொல்லலாம்.
மெரினா கடற்கரை இப்படித்தான் ஒரு மாற்றுக் களமாகப் புகழடைந்தது என்று கண்டு நமது அரசியல் ஆய்வை நாமே மெச்சிக்கொள்ளலாம். அரசின், சட்டமன்றத்தின் தீர்மானம் வேண்டாம் என்று மறுத்து, செயல்படுத்தும் கட்டாயத்தை உருவாக்கும் நீதிமன்றத் தீர்ப்பை மக்கள் கேட்கிறார்கள் என்று சொல்லலாம். சட்டமன்றமல்ல, நீதிமன்றம்தான் மக்கள் தங்களின் ஆட்சியாளர்களை எதிராளியாக்கி, எதிர்நின்று உரையாடும் களமாகிவிட்டது என்றும் சொல்லலாம். நீதித் துறையே அரசாங்கத்தின் வழக்கமான பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதை நமது ஜனநாயகத்துக்கு உருவாகியுள்ள புதிய கவலையாக நாம் கருதுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மோந்தெஸ்கு என்று ஒரு அரசியல் அறிஞர்.. அரசு, சட்ட மன்றம், நீதித் துறை மூன்றும் தனித் தனியாக, சுதந்திரமாக இருப்பதுதான் மக்களின் சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு என்று அவர் சொன்னார். அவருடைய அச்சம் அரசாங்கத்தின் அதீத அதிகாரம் தொடர்பானது. அவர் காலத்துக்கு முன்பு இவை மூன்றுமே ஒன்றாக இருந்திருக்கலாம். இங்கிலாந்தில்கூட நீதிபதிகள் உத்தரவிட்டு, சாலைகளையும் பாலங்களையும் செப்பனிட்டதாகப் படிக்கிறோம். அந்த நிலையை நமது ஜனநாயகம் நெருங்கியிருக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இன்மைக்கு வன்முறை மட்டுமே அடையாளம் என்று சொல்ல முடியாது. அரசு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளுக்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பதும் அந்த நம்பிக்கையின் தேய்வுக்கு அறிகுறி.

சைக்கிளில் பழம் விற்ற சுரிந்தர் சிங், இன்று 12 உலக நாடுகளுக்கு பழங்கள் ஏற்றுமதி தொழில் புரியும் கோடீஸ்வரர்

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் கூடிய கடுமையான உழைப்பும் ஒருவரை எந்த உச்சத்துக்கும் கொண்டு செல்லும் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறது சுரிந்தர் சிங் என்பவரது ஊக்கமிகு கதை. பழங்களை சைக்கிளில் விற்பனை செய்த இவர், தற்போது மில்லியன் டாலர் தொழிலின் அதிபதியாகவும் உலகமெங்கும் 12 நாடுகளில் தனது நிறுவன கிளையை பரப்பி வெற்றியாளராக வலம் வருகிறார்.


சுரிந்தர் சிங் பஞ்சாபில் உள்ள அபோஹர் எனும் இடத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை ஐந்தாம் கிளாசோடு மூட்டைக் கட்டிவிட்டார். பின், சைக்கிளில் பழங்களை விற்று வருமானம் ஈட்டத் தொடங்கினார். அப்போதிலிருந்து பழங்களுக்கான மதிப்பையும், அதன் விற்பனையில் உள்ள தொழிலையும் புரிந்துகொண்ட சுரிந்தர், அருகாமையில் இருந்த ஒரு சிறிய மார்க்கெட்டில் ஒரு பழக்கடையை தொடங்கினார். பழங்கள் விற்பனையில் தான் நன்றாக முன்னேறுவதை உணர்ந்த அவர், அதை மேலும் விரிவுப்படுத்த விரும்பினார். ஆனால் முதலீடு இல்லாமல் தவித்தார். வங்கியில் இருந்து லோன் எடுத்து மொத்த வியாபார கடையை திறந்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லையென்றாலும் தான் எடுத்த முயற்சியை பின்வாங்காமல் தொடர்ந்தார். 

தன் தொழிலுக்கு தனித்துவத்தை பெற, பஞ்சாபில் விளையும் ஒருவகை உயர்ரக ஆரஞ்சு பழவகையான கின்னோஸ் பழங்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் சுரிந்தர். இந்த விற்பனை சூடுபிடிக்க, அவருக்கு தொழிலில் அதிக லாபமும் கிடைத்தது. அவரின் பெயர் அந்த ஏரியா முழுதும் பிரபலம் ஆகியது. இது அவரை இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தெரியச் செய்தது. அதன்மூலம், கின்னோஸ் பழங்களை இந்தியா வெளியே பல நாடுகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புகள் குவிந்தது. தற்போது அவர் ப்ரேசில், பாங்களாதேஷ், துபாய் மற்றும் உக்ரேன் என்று பல நாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்கிறார். 

தொழிலை விரிவாக்கம் செய்ய, சிங் ஒரு பேக்டரியை திறந்து அதில் பழங்களுக்கு தேவையான க்ரேட்டுகள் மற்றும் நான்கு ட்ரக்குகளையும் வாங்கினார். சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒவ்வொரு ட்ரக்கும், கின்னோஸ் பழங்களை தென்னிந்தியா வரை சப்ளை செய்கிறது. தன் தொழிலை பெருக்கி, விரிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சுரிந்தருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ஒரு அற்புதமான குணம். அதற்கான தேவையான தொழில்நுட்பம், கட்டமைப்பையும் அவர் உருவாக்க தவறுவதில்லை. அப்போது தான் பழங்கள் கெடாமல் ப்ரெஷ்ஷாக இருக்கும் விற்பனையும் பெருகும் என்ற நம்பிக்கை உடையவர். 

தரத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதற்கு சமரசம் செய்யாமல் நல்ல பழங்களை விற்பனை செய்வதில் குறியாக அவர் இருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் ஆனது. அதனால் தான் அவரால் உலகமெங்கும் கோடி ரூபாய்களில் தொழில் செய்யமுடிகிறது. 400 ஊழியர்களை கொண்டுள்ள இவரது தொழிலின் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு கோடிகளை தாண்டுகிறது. இவர் தனது ஊழியர்களுக்கு ஊக்கமிகு முதலாளியாக வலம் வருகிறார். அதே போல் விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிக்காட்டி அவர்களை அதில் தொழில் செய்ய ஊக்குவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Sunday, 26 March 2017

ஆய கலைகள் 64

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.


'அறுபத்துநாலு கலை' என்னும் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனைத்தும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்படி இங்குத் தரப்பட்டுள்ளது.

  1. அக்கர இலக்கணம் - எழுத்திலக்கணம்
  2. லிகிதம் (இலிகிதம்) - எழுத்தாற்றல்
  3. கணிதம் - கணிதவியல்
  4. வேதம் - மறை நூல்
  5. புராணம் - தொன்மம்
  6. வியாகரணம் - இலக்கணவியல்
  7. நீதி சாஸ்திரம் - நய நூல்
  8. சோதிடம் - கணியக் கலை
  9. தரும சாஸ்திரம் - அறத்து பால்
  10. யோகம் - ஓகக் கலை
  11. மந்திரம் - மந்திரக் கலை
  12. சகுனம் - நிமித்தக் கலை
  13. சிற்பம் - கம்மியக் கலை
  14. வைத்தியம் - மருத்துவக் கலை
  15. உருவ சாஸ்திரம் - உருப்பமைவு
  16. இதிகாசம் - மறவனப்பு
  17. காவியம் - வனப்பு
  18. அலங்காரம் - அணி இயல்
  19. மதுர பாடனம்           இனிது மொழிதல்
  20. நாடகம் - நாடகக் கலை
  21. நிருத்தம் - ஆடற் கலை
  22. சத்த பிரமம் - ஒலிநுட்ப அறிவு
  23. வீணை - யாழ் இயல்
  24. வேனு - குழலிசை
  25. மிருதங்கம் - மத்தள நூல்
  26. தாளம் - தாள இயல்
  27. அகத்திர பரீட்சை - வில்லாற்றல்
  28. கனக பரீட்சை - பொன் நோட்டம்
  29. இரத பரீட்சை - தேர் பயிற்சி
  30. கஜ பரீட்சை - யானையேற்றம்
  31. அசுவ பரீட்சை - குதிரையேற்றம்
  32. இரத்தின பரீட்சை - மணி நோட்டம்
  33. பூ பரீட்சை - மண்ணியல்
  34. சங்கிராம இலக்கணம் - போர்ப் பயிற்சி
  35. மல்யுத்தம் - கைகலப்பு
  36. ஆகர்ஷணம் - கவிர்ச்சியல்
  37. உச்சாடணம் - ஓட்டுகை
  38. வித்து வேஷணம் - நட்பு பிரிக்கை
  39. மதன சாஸ்திரம் - மயக்குக் கலை
  40. மோகனம் - புணருங் கலை (காம சாத்திரம்)
  41. வசீகரணம் - வசியக் கலை
  42. இரசவாதம் - இதளியக் கலை
  43. காந்தர்வ விவாதம் - இன்னிசைப் பயிற்சி
  44. பைபீல வாதம் - பிறவுயிர் மொழி
  45. தாது வாதம் - நாடிப் பயிற்சி
  46. கெளுத்துக வாதம் - மகிழுறுத்தம்
  47. காருடம் - கலுழம்
  48. நட்டம் - இழப்பறிகை
  49. முட்டி - மறைத்ததையறிதல்
  50. ஆகாய பிரவேசம் - வான்புகுதல்
  51. ஆகாய கமனம் - வான் செல்கை
  52. பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டு கூடுபாய்தல்
  53. அதிரிச்யம் - தன்னுறு கரத்தல்
  54. இந்திர ஜாலம் - மாயம்
  55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
  56. அக்னி ஸ்தம்பம் - அழற் கட்டு
  57. ஜல ஸ்தம்பம் - நீர்க் கட்டு
  58. வாயு ஸ்தம்பம் - வளிக் கட்டு
  59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
  60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
  61. சுக்கில ஸ்தம்பம் - விந்துக் கட்டு
  62. கன்ன ஸ்தம்பம் - புதையற் கட்டு
  63. கட்க ஸ்தம்பம் - வாட் கட்டு
  64. அவத்தை பிரயோகம்சூனியம்

வேறொரு பட்டியல்:

  1. பாட்டு (கீதம்);
  2. இன்னியம் (வாத்தியம்);
  3. நடம் (நிருத்தம்);
  4. ஓவியம்;
  5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
  6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
  7. பூவமளியமைக்கை;
  8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
  9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
  10. படுக்கையமைக்கை;
  11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
  12. நீர்வாரி யடிக்கை;
  13. உள்வரி (வேடங்கொள்கை);
  14. மாலைதொடுக்கை;
  15. மாலை முதலியன் அணிகை;
  16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
  17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
  18. விரை கூட்டுகை;
  19. அணிகலன் புனைகை;
  20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
  21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
  22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
  23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
  24. தையல்வேலை;
  25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
  26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
  27. விடுகதை (பிரேளிகை);
  28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
  29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
  30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
  31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
  32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
  33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
  34. கதிரில் நூல் சுற்றுகை;
  35.  மரவேலை;
  36. மனைநூல் (வாஸ்து வித்தை);
  37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
  38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
  39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
  40. தோட்டவேலை;
  41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
  42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
  43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
  44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
  45. மருமமொழி (ரகசிய பாஷை);
  46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
  47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
  48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
  49. பொறியமைக்கை;
  50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
  51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
  52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
  53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
  54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
  55. யாப்பறிவு;
  56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
  57. மாயக்கலை (சாலவித்தை);
  58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
  59. சூதாட்டம்;
  60. சொக்கட்டான்;
  61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
  62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
  63. படக்கலப் பயிற்சி;
  64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

ஆய கலைகள் 64

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . ' அறுபத்துநாலு கலை '...